கலாஷேத்ரா கல்லூரியில் மூத்த பேராசிரியர் ஒருவர் அட்ஜெஸ்ட் செய்யாவிட்டால் மதிப்பெண் குறைப்பேன் என மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் மாணவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
கலாஷேத்ரா விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, ஹரி பத்மன் என்ற பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது, ரஷ்ய நாட்டை சேர்ந்த முன்னாள் மாணவி ஒருவர் மேலும் ஒரு பேராசிரியர் மீது இ-மெயில் மூலம் பாலியல் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், விடுதியில் தங்கி படித்த போது, பேராசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தார். அதற்கு நான் இணங்கவில்லை என்பதால், மார்க்கில் கைவைப்பதாக மிரட்டினார். அதோடு எனக்கு ஒப்பனைகள் சரியாக இல்லை என்று சிறப்பு பயிற்சி அளிப்பதாக கூறி இரவு நேரத்தில் அவரது வீட்டுக்கும் அழைத்தார் என்று கூறியுள்ளார். வீட்டுக்கு சென்ற போது, பாலியல் வன்கொடுமை செய்ததாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். வெளியே சொன்னால் ஒழுக்கமற்ற நிலையில் வகுப்பில் நடந்து கொள்வதாக கூறி கல்லூரியில் இருந்து வெளியே அனுப்பிவிடுவதாக மிரட்டினார். தன்னை பலமுறை வன்கொடுமை செய்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பேராசிரியர் ஹரி பத்மன் மீது நடவடிக்கை எடுத்ததாக தோழிகள் மூலமாக தெரிந்துகொண்டேன். எனவே அந்த ஆசிரியர் மீதும் நடவடிக்கை வேண்டும் என்பதற்காகவே புகார் அளிக்கிறேன். இதற்கான ஆதாரங்களை விசாரணையின்போது அளிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.