கல்லூரிகளில் மாணவர்களிடையே இலக்கிய போட்டிகள் மூலம் தமிழ் மொழியை வளர்த்தெடுக்க மன்றங்கள் அமைக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் தமிழ் மன்றங்கள் அமைத்து அதன் மூலமாக கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படும். அதற்காக ஒவ்வொரு கல்லூரிக்கும் வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய் வீதம் 100 கல்லூரிகள் தேர்வு செய்யப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள தமிழ் மன்றங்கள் மேம்படுத்தப்பட்டு ஆண்டுக்கு 3 தமிழ் தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதற்காக பள்ளிக்கு 9 ஆயிரம் வீதம் நிதி உதவி வழங்கப்படும். தமிழ் பல்கலைக் கழகங்களில் தமிழ் பன்னாட்டு மரபுகள் ஆவணப்படுத்தப்பட்டு மீட்டுருவாக்கம் செய்யப்படும் எனவும், திருக்குறளுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெரும் வகையில் திருக்குறள் மாநாடு நடத்திட ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.