தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டம், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2021ம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்த முக்கிய வாக்குறுதி குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பதாகும். பின்னர் தேர்தல் நடைபெற்று திமுக ஆட்சிக்கு வந்து பல வாக்குறுதிகளை நிறைவேற்றியது. ஆனால் மாதம் தோறும் ரூ.1000 உரிமைத் தொகை என்பதை இன்னமும் நடைமுறைப்படுத்தவில்லை. தமிழக அரசிடம் போதிய நிதி இல்லாததே இதற்கு காரணம் என்றும் ஆனால் நிச்சயம் இத்திட்டத்தை அரசு நிறைவேற்றும் எனவும் கூறப்பட்டது. இது தொடர்பாக எதிர்கட்சியினரும் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பரப்புரையில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், மகளிருக்கு மாதந்தோறும் ரூ. 1,000 உரிமை தொகை வழங்கும் திட்டம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்தார். அதன்படி, ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன்3ம் தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை என்றாலும் இது அனைத்து பெண்களுக்கும் கிடைக்குமா? இந்த உரிமைத்தொகையை வாங்க யாரெல்லாம் தகுதியானவர்கள் என்ற பல கேள்விகள் மக்களிடையே இருந்தது. அதன்படி இந்த திட்டத்துக்கான பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை நிதித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.