• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஆறுமுகசாமி ஆணைய வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

Byமதி

Nov 30, 2021

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவதில் இருந்து அப்போலோ சமீபத்தில் விலக்கு கோரியிருந்தது. இதில் அப்போலோ மற்றும் தமிழக அரசு சார்பில் குழுவை விரிவுபடுத்துதல், மருத்துவர்களை குழுவில் இணைத்தல் போன்ற பல்வேறு வாதங்களும், கருத்துகளும் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இவ்வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அப்போலோ மருத்துவமனை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணைய விசாரணை விரைவில் முடிந்து மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும். மேலும், சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், ‘எந்தெந்த சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்ற பட்டியலைத் தர அப்போலோவுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஆறுமுகசாமி ஆணையத்தின் அறை நீதிமன்ற அறைபோல இருக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கு தொடர்பான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மேலும், ஆணையத்தின் செயல்பாடு மற்றும் மருத்துவக்குழு உள்ளிட்டவை குறித்து விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.