• Mon. May 6th, 2024

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு

Byவிஷா

Apr 24, 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ரம்ஜான் பண்டிகையை முன்;னிட்டு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்துள்ளதால், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்படும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2, மாணவர்களுக்கு மார்ச் 1 முதல் ஏப்.8 வரை பொதுத் தேர்வு நடைபெற்று முடிந்தது. இதனைத் தொடர்ந்து 1-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு ஏப்.2 முதல் தொடங்கியது. இந்தத் தேர்வுகள் ஏப்.12 இல் முடிக்கப்பட்டு ஏப்.13 முதல் கோடை விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டிருந்தது.
இதனிடையே, 4-9 வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.10, 12 ஆகிய நாள்களில் நடைபெறவிருந்த தேர்வுகள் ரம்ஜான் பண்டிகை காரணமாக, ஏப்.22, 23 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன. அந்த வகையில் இறுதித் தேர்வுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு இன்று (ஏப்.24) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1, அல்லது 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் கடந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது. அந்த வகையில் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும், ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அதன்பிறகே பள்ளிகள் திறப்பு இருக்கும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *