தமிழ்நாட்டில் நாளை தொடங்கும் கோடை மழை ஏப்ரல் 12-ம் தேதி வரை நீடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மார்ச் 27-ம் தேதி முதல் வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வருகிறது. நாளை வரை வெயிலின் தாக்கம் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதன்படி வெப்பத்தின் அளவு இயல்பை விட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பதிவாகி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கோடை மழை துவங்கியுள்ளது.
ராஸ்பி அலைவு, வெப்பமண்டல காற்று குவிதல் மற்றும் காற்று சுழற்சி போன்ற காரணிகளால் கோடை மழை நாளை(ஏப்ரல் 3) தொடங்கி 12-ம் தேதி வரை நீடிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நாளை முதல் 5-ம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதில் நாளை(ஏப்ரல் 3) நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுநாள் (ஏப்ரல் 4) மற்றும் ஏப்ரல் 5-ம் தேதிகளில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும். கனமழை பெய்யக்கூடிய பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையையும் ஆய்வு மையம் விடுத்திருக்கிறது.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 6-ம் தேதி தென் கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்று சுழற்சி ஒன்று உருவாக உள்ளதாகவும், அதனால் 7, 8 மற்றும் 9-ம் தேதிகளில் கடலோர, உள் மாவட்டங்கள் என தமிழ்நாட்டில் பரவலாக இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் தெரிவித்தார். இதனால் தமிழ்நாட்டில் இயல்பைவிட வெயிலின் தாக்கம் குறைந்து இயல்பான அளவில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.