வடகொரியாவை கடந்த 1948-ம் ஆண்டு உருவாக்கியவர் தான் கிம் இல் சங். இவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நாட்டை ஆண்டு வந்தார். கடந்த 1994-ம் ஆண்டு இவர் இறந்த பிறகு, அவருடைய மூத்த மகன் கிம் ஜாங் இல் அதிபரானார்.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு (டிச. 17) உயிரிழந்ததால், தற்போது வடகொரியாவை கிம் ஜாங் இல்லின் மூன்றாவது மகன் ஆன, கிம் ஜாங் உன் மூன்றாவது தலைமுறையாக ஆண்டு வருகிறார்.
இந்நிலையில், இந்த ஆண்டு 10-வது ஆண்டு அவரின் நினைவு தினம் என்பதால், அதை முன்னிட்டு மதுபானம் அருந்துவதற்கும், சிரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வடகிழக்கு எல்லை நகரமான சினுய்ஜுவை சேர்ந்த வட கொரியர் ஒருவர் ரேடியோ ஃப்ரி ஏசியாவிடம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், அவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் இவருடைய நினைவு தினத்தில் 10 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த துக்க காலத்தில் மது குடிக்கக்கூடாது, அப்படி மது குடித்து கடந்த காலங்களில் பிடிபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகளாக நடத்தப்பட்டனர். ஆனால், அவர்கள் எங்கு அழைத்து செல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை.இன்று வரை அவர்களை மீண்டும் பார்க்கவில்லை. இந்த துக்க காலத்தில், உங்கள் குடும்ப உறுப்பினர் யார் இறந்தாலும், நீங்கள் சத்தமாக அழுக கூடாது, அதே போன்று பிறந்த நாள்களை கொண்டாட முடியாது என்று கூறினார்.