மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு புது பாஸ்போர்ட் வழங்க சுப்பிரமணியன்சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புது பாஸ்போர்ட் வாங்குவதற்கு தடை இல்லா சான்று கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். பிரதமர் மோடி பற்றிய அவதூறு பேச்சுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் அவர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கான அரசாங்க பாஸ்போர்ட்டை திருப்பியளித்தார். இந்நிலையில் அமெரிக்காவுக்கு போக ராகுல்காந்தி திட்டமிட்டு, இதற்கென சாதாரண பாஸ்போர்ட் வாங்குவதற்கு முடிவுசெய்துள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு புது பாஸ்போர்ட் வழங்க சுப்பிரமணியன் சாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லி பெருநகர கூடுதல் தலைமை நீதித்துறை நடுவர் முன் சுப்பிரமணியன் சாமி தரப்பு ஆட்சேபம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.