• Fri. Mar 29th, 2024

ராஜபாளையம் அருகே, 2 மகள்களுடன், தாய் கிணற்றில் விழுந்து தற்கொலை…..

ByKalamegam Viswanathan

May 24, 2023

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (35). இவரது மனைவி ராமுத்தாய் (30). இவர்களுக்கு நிஷா (6), அர்ச்சனா (3) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். முத்துக்குமார் வெல்டிங் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் முத்துக்குமாருக்கும், ராமுத்தாய்க்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமுத்தாய் செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த முத்துக்குமார், மனைவி செல்போனில் பேசுவதை கண்டித்து, செல்போனை பிடிங்கி கிழே போட்டு உடைத்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கிடையே மீண்டும் வாய்த் தகராறு ஏற்பட்டது. கணவர், போனை பிடிங்கி உடைத்ததால் மன வருத்தமடைந்த ராமுத்தாய் தனது இரண்டு மகள்களையும் வீட்டிலிருந்து வெளியே அழைத்துச் சென்றார். நீண்ட நேரமாகியும் தாயும், மகள்களும் வீட்டிற்கு திரும்பாததால் அவர்களது உறவினர்கள் பல இடங்களிலும் அவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்தப் பகுதியில் இருந்த தோட்டத்து கிணறு ஒன்றில் ராமுத்தாய் மற்றும் நிஷாவின் உடல்கள் மிதப்பதை, அந்தப் பகுதியில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். உடனடியாக ராமுத்தாயின் உறவினர்கள் அந்தப்பகுதிக்கு திரண்டு வந்தனர். தகவலறிந்த சேத்தூர் காவல்நிலைய போலீசார், தீயணைப்பு வீரர்களை வரவழைத்து கிணற்றில் மிதந்த ராமுத்தாய் மற்றும் நிஷாவின் உடல்களை மீட்டனர். மேலும் சுமார் 3 மணி நேரம் போராடி, கிணற்றின் பாறையில் சிக்கியிருந்த அர்ச்சனாவின் உடலையும் மீட்டனர். மீட்கப்பட்ட உடல்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து சேத்தூர் காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத் தகராறில் தாய், தனது 2 மகள்களுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *