• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தேவாரம் பாடிய சத்குரு குருகுல மாணவர்கள்!

ByKalamegam Viswanathan

Jan 20, 2025

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சத்குரு குருகுல மாணவர்களின் தேவார பண்ணிசை அர்ப்பணிப்பு நிகழ்ச்சி இன்று (20/01/2025) நடைபெற்றது. பாரம்பரிய பண்ணிசை மரபில் மாணவர்கள் பாடிய தேவார பதிகங்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

தேவாரம் எனும் அற்புத கொடையை நமக்கு அருளிச் சென்ற ‘தேவார நாயன்மார்களுக்கு’ நன்றியுணர்வை வெளிப்படுத்தவும், இன்றைய இளைஞர்கள் மத்தியில் தேவாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்திலும் சத்குருவின் வழிக்காட்டுதலில் சம்ஸ்கிருதி மாணவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள 15-க்கும் மேற்பட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் தேவாரப் பண்ணிசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அமைந்துள்ள கலையரங்க மண்டபத்தில் சத்குரு குருகுல மாணவர்கள் தேவாரப் பாடல்களை பாடினர். இதில் கோவிலுக்கு வந்த நூற்றுக்கணக்கான சிவனடியார்களும் பக்தர்களும் பங்கேற்று தேவாரப் பாடல்களை கேட்டு, பாடிய மாணவர்களை வெகுவாகப் பாராட்டினர்.

முன்னதாக இந்நிகழ்ச்சி பேரூர் ஆதீனம், காமாட்சி புரம் ஆதீனம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர், காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர், சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர், சிரவை ஆதீனம், மயிலை கபாலீஸ்வரர், விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீசுவரர், கொடுமுடி மகுடேஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடைபெற்றது.

சத்குரு தேவாரம் குறித்து பேசுகையில் “தமிழ் கலாச்சாரம் என்பது அடிப்படையாக பக்தியை மூலமாக வைத்து வளர்ந்த கலாச்சாரம். பக்தி என்றால் எல்லையில்லாத ஈடுபாடு. திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் இது போல பல மகான்கள் பக்தி பரவசத்தில் உருவாக்கிய கலாச்சாரம் இந்த தமிழ் மண்ணில் சேர்ந்திருக்கிறது. இந்த பக்தியின் வெளிப்பாடாக தமிழ் மண்ணில் தேவாரம் வெளிப்பட்டது. இதை அனைவரும் கேட்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

நம் தமிழ்நாட்டில் பல நூற்றாண்டுகளாக தேவார திருமுறைகள் சிவ பக்தர்களாலும், ஓதுவார்களாலும் கோவில்கள் தோறும் பாடப்பட்டு வந்துள்ளது. அந்த மரபின் தொடர்ச்சியாக சத்குரு குருகுலத்தின் ஒரு அங்கமான சம்ஸ்கிருதி பள்ளியில் மாணவர்களுக்கு சிறுவயது முதலே தேவாரப் பாடல்கள் பாரம்பரிய முறையில் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரி, நவராத்திரி, குரு பௌர்ணமி, தியானலிங்க பிரதிஷ்டை தினம் உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்பு தேவார பாடல்களை இந்த மாணவர்கள் பாடி வருவது குறிப்பிடத்தக்கது.