திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட ஆஸ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் 12 தங்கம் உட்பட 20 பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உலக சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
ஜிம்மி ஜார்ஜ் உள் அரங்கில் கடந்த 4 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற இதில் இந்தியா, மலேசியா, ஸ்ரீலங்கா, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேரந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

சப் ஜூனியர்,ஜீனியர்,சீனியர் என பல்வேறு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி சார்பாக கோவையை சேர்ந்த மாணவ, மாணவிகள் பலர் பங்கேற்றனர்.
ஒற்றை கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, வாள் வீச்சு, சிலம்பு சண்டை, அலங்கார வரிசை, மான் கொம்பு, வேல் கம்பு போன்ற பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற, இதில் கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் பள்ளியில் இருந்து கலந்து கொண்ட 10 மாணவர்களும் 20 பதக்கங்கள் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
12 தங்கம் 2 வெள்ளி 6 வெண்கலம் என 20 பதக்கங்கள் பெற்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு கோவைபுதூர் ஆஸ்ரம் பள்ளி வளாகத்தில் மேள தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் தேவேந்தரன்,கவுரி, செயலாளர் ரவிக்குமார், நிர்வாகி உதயேந்திரன், வித்யாஸ்ரம் பள்ளியின் இயக்குனர் சவுந்தர்யா, ஆஸ்ரம் பள்ளி முதல்வர் சரண்யா,சிலம்பம் பயிற்சியாளர் பவித்ரா பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
வெற்றி வாகை சூடி வந்த வீரர் வீராங்கனைகளை பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு சந்தன மாலைகள் அணிவித்தும், சால்வைகள் போற்றி இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களது ஆற்றல் மிகு சிலம்பத்திறனை தங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிகழ்த்தி காட்டினர்.