தேனி மாவட்டத்தில், தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலத்தை தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே கொடி அசைத்து துவக்கி வைத்தனர். தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பெ.இளங்கோ முன்னிலையில் தேனி, பங்களாமேடு திடலில் விழிப்புணர்வு ஊர்வலம் தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, ஆட்சி மொழிச் சட்டம் குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை மாணவ, மாணவிகள் ஏந்திச் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர். இந்த விழிப்புணர்வு ஊர்வலம் பங்களா மேட்டில் தொடங்கி மதுரை சாலை, பெரியகுளம் சாலை வழியாக பாரத ஸ்டேட் வங்கித் திடல் வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில் தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லூரி, மேல்நிலைப் பள்ளி, போடி ஏ.வி.ச. கல்லூரி, உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தார் ஹவுதியா கல்லூரி, கொடுவிலார்பட்டி தேனி கம்மவார் சங்கம், ஆண்டிபட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.