மதுரையில் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக செயல்பட்டுள்ள வட்டாட்சியர், நில அளவையர், மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட அனுப்பானடி பாலகுமார் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டையை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, செய்தியாளர்களிடம் கூறியதாவது;
மதுரை அனுப்பானடியில், வசித்து வரும் எங்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியனுக்கும் நிலம் அத்துமால் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், இந்த வழக்கில் நீதிமன்றம் நிலத்தை அளவீடு செய்து முறையான நடவடிக்கை எடுக்கும்படி கடந்த 2021 ஆம் ஆண்டு அப்போதைய தெற்கு தாசில்தார், நில அளவையர், மதுரை கிழக்கு கிராம நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட்டது. அதிகாரிகள் மூன்று பேரும் நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்காமல், நீதிமன்றத்திற்கு எதிராகவும் சுப்பிரமணியன் அவருக்கு சாதகமாக எங்களது வீட்டின் பின்புறம் உள்ள சுவர் முழுவதையும் இடித்து தள்ளினார்.
நீதிமன்ற ஆனைப்படி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், ஆகியோர் முறையாகக் கையாளாமல் எதிர்தரப்பினரிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தங்கள் அரசு பதவியை முறைகேடாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து நீதிமன்ற தீர்ப்பையும் வருவாய்த்துறை அரசாணையும் அவமதிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, தகவல் உரிமை சட்டத்தில் கேட்டதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீட்டை இடிப்பதற்கு எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கவில்லை என கூறிய நிலையில், உயர் நீதிமன்றம், மாவட்ட ஆட்சித் தலைவருக்கு இது சம்பந்தமாக முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
ஆனால், மாவட்ட ஆட்சித் தலைவர் அதிகாரிகளுக்கு சாதகமாக செயல்பட்டு எங்களுடைய புகார் கடிதத்தை ரத்து செய்தது, மட்டுமில்லாமல் அரசு அதிகாரிக்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாக மாவட்ட ஆட்சித் தலைவர் செயல்படுவதாகவும், அதனால் எங்களுடைய குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பதற்காக வந்துள்ளோம் எனக் கூறினர்.