• Sat. Apr 20th, 2024

தமிழகம் மற்றும் புதுவையில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.!

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

இது வடக்கு திசையில் அந்தமான் நிக்கோபார் தீவு வழியாக நகர்ந்து இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலுக்கு அசானி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே புயல் அந்தமான் தீவுகளில் இருந்து மியான்மர் மற்றும் தெற்கு வங்காளதேசம் கடற்கரையை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் தீவுகளில் புயல் கரையை கடக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடகிழக்கு நோக்கி 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து, அந்தமான் கடலில் மையம் கொண்டிருந்தது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஓட்டி வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்றும், நாளையும் அந்தமான் கடல், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 85 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம், காரைக்கால், புதுச்சேரி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *