• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சென்னையை நோக்கி நகரும் புயல்

Byவிஷா

Nov 27, 2024

தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னையை நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக பலத்த தரைக்காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரையை நோக்கி நகர்வதால் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகம் தற்போது 13 கி.மீ ஆக அதிகரித்துள்ளது.
நாகைக்கு 400 கி.மீ. தென் கிழக்கிலும், சென்னைக்கு 590 கிமீ தெற்கு – தென்கிழக்கில் மையம் கொண்டுள்ள நிலையில் வங்கக் கடலில் உருவாகும் பெங்கல் புயல் காரணமாக சென்னை பட்டினப்பாக்கம், மெரினா கடற்கரை பகுதிகளில் அலைகள் கொந்தளிப்புடன் காணப்படுகின்றன.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்பகுதியில் 3 முதல் 4 அடி உயரம் வரை கடல் அலைகள் எழும்புகின்றன. சென்னை காசிமேடு பகுதியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்ட கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பால் பேரலைகள் எழுகின்றன.
பலத்த தரைக்காற்று வீசும் என்பதால் கடற்பகுதிக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என போலீசார் கூறி வருகின்றனர். எச்சரிக்கையை மீறி கடற்கரை பகுதிக்கு வரும் பொதுமக்களை போலீசார் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.
வங்க கடலில் பெங்கல் புயல் உருவாகும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பல அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து அடங்குகிறது. இந்நிலையில் புயல் பாதையை மாற்றியதால் டெல்டா மாவட்டங்களில் கனமழை அபாயத்தில் இருந்து தப்பியதாகவும், சென்னையை நோக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதால் சென்னையில் அடுத்து வரும் நாட்களில் குறிப்பாக டிசம்பர் 1 தேதி அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.