வருகிற 21-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்களின் ஐக்கிய பேரவை அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் மாணவர்களுக்கான பேருந்து கட்டண விகிதம் மற்றும் வாகன வரியில் இருந்து தனியார் பஸ்களுக்கு விலக்கு அளிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தனியார் பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுதொடர்பாக கடந்த நவம்பர் 8-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருடன் கோட்டயத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. இதில், 10 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியதால் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டதாக அறிவித்தனர். இந்த நிலையில், மீண்டும் வருகிற 21-ம் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்களின் ஐக்கிய பேரவை அறிவித்துள்ளது.