கோவையில் உள்ள ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியருக்கான ஒருங்கிணைப்பு விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிப் பேசும்போது, தேசிய அளவிலான பல்வேறு ஆய்வுகளில் கல்லூரி பெற்ற சிறப்புகளையும் விருதுகளையும் பற்றிக் குறிப்பிட்டார். கல்லூரிப் பருவத்தில் மாணவிகள் அறிவைப் பெறுவதோடு, தொழில்நுட்பத் திறன்களைப் பெற்று உடலளவிலும் மனதளவிலும் வலிமை மிக்கவர்களாக இருக்க வேண்டும். வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து கற்பதற்கான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளர் முனைவர் இ.சா.பர்வீன் சுல்தானா அவர்கள் கலந்து கொண்டு பேசும்போது, கல்லூரிப்பருவம் என்பது துறைமுகத்தில் கப்பல்களைக் கட்டமைக்கும் காலத்தைப் போன்றது. எதிர்காலத்தில் வாழ்க்கைக் கடலில் சவால்களைச் சந்திக்கும்போது வல்லமை மிக்கவர்களாக இளம் மனங்கள் உருவாக வேண்டுமானால் கல்லூரி வாழ்க்கையை ஆக்கப்பூர்வமான காலமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், சமுதாயத்தில் எந்த நிலையில் இருந்தாலும் கல்வியின் மூலம் உலகளாவிய அங்கீகாரம் பெற முடியும். உங்கள் வாழ்க்கையைச் செதுக்கும் சிற்பிகளாக உருமாறுங்கள் என்று மாணவிகளை உற்சாகப்படுத்தினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா அவர்கள் கல்லூரியின் சாதனைகளையும் பல்வேறு துறைகளில் மாணவியர் பெற்ற வெற்றிகளையும் குறிப்பிட்டு, கல்லூரி வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மாணவியரை வாழ்த்தி வரவேற்றார். கல்லூரியின் ஹெல்த் அண்ட் வெல்னெஸ் கிளப் சார்பில் ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை மூலம் பார்வையாளர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.



