• Sat. Apr 27th, 2024

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க நாளை முதல் சிறப்பு ஏற்பாடுகள்

ByA.Tamilselvan

Nov 27, 2022

நாளை முதல் மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.
தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்கிற குறுஞ்செய்தி பொதுமக்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (28-ந்தேதி) முதல் மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதாகவும், இந்த முகாம்கள் அடுத்த மாதம் (டிசம்பர்) 31-ந்தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறை படியே மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இந்த முகாம்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவையான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பண்டிகை நாட்களை தவிர்த்து அனைத்து நாட்களிலும் இணைப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வார இறுதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5.15 மணி வரை முகாம் நடைபெறும். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *