மதுரையில் இந்திய ராணுவ அதிகாரிகளின் போர் உத்தியால் 1971ல் நடந்த இந்தியா – பாக்., போரில் நம் வீரர்கள் உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டன என, அந்தப் போரில் பங்கேற்ற வீரர்கள் மதுரையில் நடத்திய வெற்றி நாள் விழாவில் நினைவு கூர்ந்தனர்.
இப்போரில் இந்தியா வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் போரில் பங்கேற்ற ஆறாவது பட்டா லியன் தி மெட்ராஸ் ரெஜிமென்ட் வீரர்கள் சார்பில் வெற்றி நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. 52வது வெற்றி விழா மதுரையில் முன்னாள் லெப்டினல் கர்னல் நாகராஜன் தலைமையில் நடந்தது. கவுரவ கேப்டன்கள் விஸ்வநாதன், மற்றும் பாண்டித்துரை முன்னிலை வகித்தனர். ஹவில்தார் மகாலிங்கம் வரவேற்றார்.
இது குறித்து லெப்டினல் கர்னல் நாகராஜன் பேசியதாவது: பாகிஸ்தானின் வசந்தார் நதி அருகே நடந்த இப்போர் இந்தியாவிற்கு திருப்பு முனையை ஏற்படுத்தியது. 18 – 21 வயதுக்குட்பட்ட வீரர்களே ஈடுபட்டோம். இப்போரின் மூலமே பாக்., சமாதானத்திற்கு வந்தது. 90 ஆயிரம் படை வீரர்களுடன் பாக்., ஜெனரல் நியாஜி வங்கசேதத்திடம் சரணடைந்தார். அந்தப் போரில் தமிழகத்தை சேர்ந்த 400 ராணுவ வீரர்கள் பங்கேற்றோம். நம் ராணுவ அதிகாரிகள் கடைபிடித்த போர் உத்திகளால் நம் வீரர்களின் உயிரிழப்பு வெகுவாக குறைக்கப்பட்டது. நாட்டுக்காக உயிரை துச்சமாக நினைத்து போரிட்டதை நினைத்தால் பெருமையாக உள்ளது என்றார். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பங்கேற்றனர்.