ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் அமைப்பு சார்பாக நடைபெற்ற “முப்பதும் தப்பாமே” திருப்பாவை முற்றோதல் மாநாடு நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முக கவசம் அணியாமலும் கலந்துகொண்டது நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆண்டாள் கோவிலில் மார்கழி மாதத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் முக்கியமானதாக கருதப்படுகிறது. தனியார் அமைப்பு சார்பாக “முப்பதும் தப்பாமே” என்னும் திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
சுமார் ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், முககவசம் அணியாமல், அரசு விதிமுறைகளை மீறி கோவில்களுக்குள் கையில் ஏந்திய தட்டுக்களில் சீர்வரிசையை ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னாருக்கு சமர்ப்பிக்க எடுத்துச் சென்றனர்.
நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் , ஒமிக்ரான் பரவி வரும் சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான பெண்கள் முககவசம் இன்றி கலந்து கொண்டது நோய்தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.