• Fri. Apr 26th, 2024

கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக புதுச்சேரியில் போராட்டம்

புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் விரும்பியோருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டுவரும் நிலையில், அதைக் கட்டாயமாக்கி 100% விழுக்காடு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப் போவதாக இந்தியத் துணைநிலை ஆளுநரும், நலவாழ்வு(சுகாதார)த் துறை இயக்குநரும் அறிவித்திருப்பதைக் கண்டித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் 25.12.2021 அன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்திய அரசமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில், தொடர்ந்து புதுச்சேரியில் கட்டாயத் தடுப்பூசிக்கு எதிராக மக்களை மிரட்டும் வகையில் இவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.


29.11.2021 அன்று இந்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தடுப்பூசி கட்டாயமாக்கபடவில்லை எனத் தெரிவித்துள்ளது. 01.12.2021 அன்று தில்லியில் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பலராம் பார்கவா, “ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டியதில்லை” என்று கூறியுள்ளார். இந்திய ஒன்றிய நலவாழ்வுத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், “ஒட்டுமொத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி ஒருபோதும் அரசு பேசவில்லை” என்று கூறியுள்ளார்.


23.06.2021 அன்று மேகாலயா உயர் நீதிமன்றம் Registrar General, High Court of Meghalaya v. State of Meghalaya வழக்கில் (PIL No. 6/2021) தீர்ப்பளித்து, தடுப்பூசியைக் கட்டாயப்படுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயல் எனக் கூறியுள்ளனர். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவருக்கும், செலுத்திக் கொள்ளாதவருக்கும் இடையில் பாகுபாடு காட்டும் அரசாணைகளை கவுகாத்தி உயர் நீதிமன்றம் (வழக்கு எண். PIL 13/2021, தீர்ப்பு நாள் – 19.07.2021) நிறுத்தி வைத்து ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில், இவற்றுக்கு நேர்மாறாக புதுச்சேரியில் தடுப்பூசியை அனைவருக்கும் கட்டாயப்படுத்தும் அறிவிப்பு, ஆங்கில அலோபதி மருத்துவம் மட்டுமின்றி, சித்தா – ஆயுர்வேதா – யுனானி எனப் பல்வேறு மருத்துவ முறைகளை மேற்கொண்டு வரும் மக்களை ஒற்றை அலோபதி மருத்துவத்தின்கீழ் கொண்டு செல்லும் உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.

எனவே, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் நலவாழ்வுத்துறை இயக்குநர் ஆகியோரின் கட்டாயத் தடுப்பூசி அறிவிப்பிற்கு எதிராக – எங்கள் எதிர்ப்பினை இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சனநாயக வழியில் ஒன்றுகூடித் தெரிவிக்கவும், அரசின் தடுப்பூசி விழிப்புணர்வால் உந்தப்பட்டு தடுப்பூசி போட்டுக் கொண்டு பாதிப்பைச் சந்தித்துள்ளோருக்கு உரிய நட்ட ஈடு வழங்க வேண்டுமெனக் கோரியும் 25.12.2021 அன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில் – புதுச்சேரி இராசா திரையரங்கம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பல்வேறு தோழமை அமைப்பினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, புதுச்சேரி தமிழ்த்தேசியப் பேரியக்கச் செயலாளர் இரா.வேல்சாமி தலைமை தாங்கினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க.அருணபாரதி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். த.தே.பே. தொரவி செயலாளர் முருகன், காரைக்கால் செயலாளர் சூர்யா, புதுச்சேரி மாணவர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் உதயா, சத்தியமூர்த்தி, விசயகணபதி, அசோக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கப் பொதுச்செயலாளர் இரா.முருகானந்தம், தமிழர் களம் புதுச்சேரி தலைவர் கோ.அழகர், நாம் தமிழர் கட்சி பொருளாளர் மா.செ.இளங்கோவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி புதுச்சேரி அமைப்பாளர் சி.சிறீதர், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் கோ.வெங்கடேசன், புதுச்சேரித் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், நாம் தமிழர் கட்சி தொழிற்சங்கச் செயலாளர் து.இரமேசு, மகளிர் பாசறை செயலாளர் கௌரி, புதுச்சேரி கைவினைக் கலைஞர்கள் நலவாழ்வு சங்கம் எஸ்.மூர்த்தி, அக்கு மருத்துவர் ஹீலர் திரிபுரசுந்தரி, தெய்வத் தமிழ்ப் பேரவை செயலாளர் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ் , புதுச்சேரி மகளிர் ஆயம் செயலாளர் த.சத்தியா, தொரவி மகளிர் ஆயம் இந்திராணி, சாந்தா, தர்சினி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.கண்டிக்கின்றோம், கண்டிக்கின்றோம்! கட்டாயத் தடுப்பூசித் திணிப்பை கண்டிக்கின்றோம்”, “விரும்பியோர்க்கு மட்டுமே தடுப்பூசி செலுத்து”, “தடுப்பூசியால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்க!”புதுச்சேரி அரசே,தடுப்பூசியைக் கட்டாயமாக்கி சட்டவிரோதமாகத் திணிக்காதே!,


விரும்புவோருக்கு மட்டுமே தடுப்பூசியை செலுத்த ஆணையிடு!,தடுப்பூசி செலுத்தாதோருக்கு எவ்வித உரிமைகளையும் மறுக்காதே!,தடுப்பூசி போட்ட பின்பு உயிரிழந்தோர் மற்றும் உடல்நலமிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடு!என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர்கட்டாயத் தடுப்பூசித் திணிப்பிற்கு எதிராக தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுத்த இவ்வார்ப்பாட்டத்தை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *