மதுரை விமான நிலைய விரிவாக்கம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு உள்ள நிலையில், நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவைத் தொடர்ந்து, சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளையில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் 146 நபர்களின் வீடுகள் நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கள் நிலத்திற்கு பதில் நாற்று நிலம் வீடு உள்ளிட்ட மீள்குடி அமர்வு செய்யாமல் இங்கிருந்து வெளியேற்றக்கூடாது என நேற்று நீதிமன்றத்தில் கிராம மக்கள் சார்பாக வழக்கு தொடர்ந்த நிலையில் சின்ன உடைப்பு பகுதியில் மீண்டும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சூழலில் வழக்கு நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது அதில் வருகிற 19ஆம் தேதி வரை சின்ன உடைப்பு கிராம மக்களின் வீடுகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் தங்கள் சின்ன உடைப்பு கிராம மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவு எடுக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.