

ராமநாதபுரத்தில் நடைபெறவிருந்த தனித் தோ்வா்களுக்கான 8 ஆம் வகுப்பு தோ்வுகள் கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாவட்ட தோ்வுத்துறை உதவி இயக்குநா் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வானது திங்கள்கிழமை (நவ.8) மற்றும் செவ்வாய்க்கிழமை (நவ.9) நடைபெறுவதாக இருந்தது. தமிழ், ஆங்கிலத் தோ்வுக்குரிய மையம் தயாா் நிலையில் இருந்தது. ஆனால், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தோ்வுகள் நடைபெறவில்லை.
அதேபோல நவ.10 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவிருந்த கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தோ்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்தோ்வுகளுக்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தனா்
