• Wed. Mar 19th, 2025

சிந்தனைத்துளிகள்

Byவிஷா

Jun 13, 2023

விவசாயி ஒருவர் தன் மனைவி திருமணப் பரிசாகக் கொடுத்த கைக் கடிகாரத்தை தொலைத்து விட்டார். அவர் தொலைத்த இடம் முழுவதும் தேடிப் பார்த்தார் எங்குமே கிடைக்கவில்லையே என்று கவலையுடன் இருந்தார்.
அங்கு சிறுவர்கள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களை அழைத்து, எனது கைக்கடிகாரம் தொலைந்து விட்டது. அதை எடுத்துக் கொடுப்பவர்களுக்கு பரிசு தருகிறேன் என்று கூறினார்.
சிறுவர்களும் ஆர்வத்துடன் அந்த வயல்வெளி முழுவதும் தேடிப் பார்த்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டனர்.
ஒரு சிறுவன் மட்டும், எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்புத் தாருங்கள்’ நான் தேடித் தருகிறேன் என்று கூறினான். அதற்கு விவசாயி சரி என்று கூறினார்.
சிறுவன் அமைதியாக உட்கார்ந்து கொண்டு, தன் காதைக் கூர்மையாக்கிக் கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது டிக்…டிக்.. என்று கடிகாரம் அடிக்கும் ஓசை அவனுக்குக் கேட்டது. அந்த இடத்தை நோக்கிச் சென்றான்.
அங்கு கிடந்த கைக்கடிகாரத்தை எடுத்து விவசாயிடம் கொடுத்தான். அவர் சிறுவனைப் பாராட்டி, எப்படி இவ்வளவு சுலபமாகக் கண்டுபிடித்தாய்? என்று வியப்புடன் கேட்டார். பிறகு பரிசையும் கொடுத்தார்.
சிறுவன் பதில் கூறினான். அந்தப் பதிலில் ஒரு நீதி இருந்தது. அது ஆரவாரம் இல்லாமல் அமைதியான மனநிலையில் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது வெற்றியைத் தரும் என்பதுதான் அந்த நீதி.