அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்தபின்னர், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. தற்போது அதிமுக ஆட்சியில் வணிகவரி துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெறுகிறது. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் பேரில் அவரது வீட்டில் இன்று காலை 6.30 மணி முதல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று, சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீரமணியின் உறவினர்கள், அவருக்கு சொந்தமான இடங்களிலும் அதிரடி சோதனை நடைபெறுகிறது.
ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள வீரமணிக்கு சொந்தமான திருமண மண்டபம் அவரது வீடு ஆகியவற்றிலும் சோதனை நடைபெறுகிறது. அதே போல் திருப்பத்தூரில் அவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.