கொரோனா காரணமாக சுருளி அருவிக்கு சுற்றுலாபயணிகள் செல்ல இரண்டு ஆண்டுகளாக தடை நீடித்துவரும் நிலையில் – தங்களின் வாழ்வாதாரமே கேள்விகுறியாகியுள்ளதாக நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் குடும்பத்தினர் வேதனையடைந்துஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி மாவட்டம் கம்பத்திலுள்ள சுருளி அருவியானது, புன்னிய தீர்த்த தலமாகவும், சுற்றுலாபயணிகளின் முக்கிய சுற்றுலாதலமாகவும் விளங்கி வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுருளி அருவிக்கு சுற்றுலாபயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ள நிலையில் அருவிக்கு வரும் சுற்றுலாபயணிகளை மட்டுமே நம்பியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் குடும்பத்தினரின் வாழ்வாதாரமே கேள்விகுறியாகியுள்ளது. தேநீர் கடை, ஹோட்டல், அழகுபொருட்கள், விளையாட்டு பொம்பைகள் உள்ளிட்ட கடைகள் வைத்திருந்த சாலையோர வியாபாரிகள் சுருளி அருவிக்கு சுற்றுலாபயணிகள் செல்வதற்கான தடையை நீக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இல்லாவிட்டால் அன்றாட உணவிற்கே தங்களின் குடும்பம் சிரமப்படும் என்றும் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜனின் வீட்டில் குவிந்த வியாபாரிகள் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு அளித்து சென்றனர்.