• Thu. Apr 25th, 2024

சென்னை விமானநிலையத்தில் பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Byவிஷா

Apr 24, 2023

சென்னையில் இருந்து கத்தார் செல்லும் விமானத்தில் திடீரென ஏற்பட்ட இயந்திரக்கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால், அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கத்தார் நாட்டு தலைநகர் தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் அதிகாலை 4:30 மணிக்கு புறப்படத் தயாரானது. இந்த விமானத்தில் 324 பயணிகள், 12 விமான ஊழியர்கள் உட்பட 336 பேர் இருந்தனர். அந்த விமானம் ஓடுபாதையில் ஓடத்தொடங்கியது. அப்போது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து விமானி உடனடியாக ஓடுபாதையில் விமானத்தை அவசர அவசரமாக நிறுத்தினார். இதுதொடர்பாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் இழுவை வாகனம் மூலம், புறப்பட்ட இடத்துக்கே இழுத்து வந்து நிறுத்தப்பட்டது. சரியான நேரத்தில் கோளாறை கண்டுபிடிக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 336 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *