• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

மேலூர் அருகே மாயமான இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை ?

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைபட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய இளம்பெண், அதே பகுதியை சேர்ந்த நாகூர் கனி என்ற இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்பட்ட நிலையில், அவர் கடத்தி செல்லப்பட்டதாக கூறி பெண்ணின் பெற்றோர் மேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தனர்.

இந்நிலையில் வீடு திரும்பிய அப்பெண்ணின், உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தலைமறைவாக உள்ள நாகூர்கனியை தேடி வந்தநிலையில், மேலும் 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயக்கமான நிலையில் சிறுமியை மூன்று நபர்கள் ஆட்டோவில் அழைத்து வந்தனர். தூக்கத்தில் இருக்கும் என நினைத்தோம், பின்னர் மேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது மருத்துவர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அவர்கள் சிறுமியின் உடல் மோசமாக உள்ளது என தெரிவித்தனர். இதனால் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எங்கள் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம். எங்களுடைய பெண்ணுக்கு நீதி வேண்டும்” என பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் தரப்பில் விசாரித்தபோது,”கடந்த மாதம் 14-ம் தேதி காதலர் தினத்தன்று இளம் பெண்ணும் – நாகூர் கனி என்ற நபரும் வீட்டை விட்டு சென்றுள்ளனர். மதுரையில் இருவரும் வீடு எடுத்து தங்கியுள்ளனர். பின் அங்கிருந்து ஈரோட்டிற்கு சென்று வாழமுடிவு செய்து அங்கே தங்கியுள்ளனர். இளம்பெண்ணின் உறவினர்கள் தேடியதாலும், இளம்பெண் மேஜர் இல்லை என்பதாலும் திரும்பி வந்துவிடக் கூறி நாகூர் ஹனிபாவின் உறவினர் வீட்டில் தெரிவித்துள்ளனர். இதனால் பதட்டத்தில் இருவரும் விஷம் குடிதுள்ளனர், இதில் கனி பாதிக்கப்படாத நிலையில் அந்த பெண்ணிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மருத்துவமனையில் இளம்பெண் சிகிச்சை எடுத்துக் கொண்டுள்ளார்.

உடல்நிலை தேரியதாக நினைத்து இளம் பெண்ணை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அப்பெண்ணுக்கு உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நாகூர் ஹனிபா மற்றும் அவரது உறவினர் நண்பர்கள் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் போக்ஸோ வழக்கும் பதியப்பட்டுள்ளது. முழு விசாரணைக்கு பின் முழு தகவல்கள் தெரியவரும் ” என்றார். இந்நிலையில் நாகூர் கனி, அவரது தாய் மதினா, சகோதரர் ராஜாமுகமது, நண்பர்கள் பிரகாஷ்ராஜ், கிருஷ்ணா மற்றும் நாகூர் அனிபாவின் உறவினர்களான ரம்ஜான் பேகம், திருப்பூரை சேர்ந்த சாகுல் ஹமீது ஆகிய 7 பேரை மேலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.