• Thu. Apr 18th, 2024

மதுரை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை.. மதுரை எஸ்.பி விளக்கம்..

மதுரை மாவட்டம் மேலூர் சிறுமி, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும், போக்சோ வழக்கு பதிவாகி உள்ளதால் சிறுமியின் படத்தையோ, பெயரையோ வெளியிடக்கூடாது என்றும் மதுரை மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் எச்சரித்துள்ளார்.

கடந்த மாதம், மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமி காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் மூன்று தனிப்படைகள் வைத்து தேடி வந்தனர். விசாரணையில் அதே பகுதியில் வசித்து வரும் நகூர் ஹனிபா என்பவரை சிறுமி காதலித்து வந்ததாகவும் அவருடன் சென்றிருக்கலாம் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மேற்படி விசாரணையை தொடர்ந்ததில், நாகூர் ஹனிபா தான் சிறுமியை முதலில் மதுரையில் இருந்த நண்பர் வீட்டுக்கும், ஈரோட்டில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றதும் உறுதியானது

காவல்துறை விசாரணையை துரிதப்படுத்தியதை அடுத்து, நாகூர் ஹனிபாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது தயார் மதினா பேகம் எச்சரித்துள்ளார். இருவரும் ஒன்றாக சென்றது போலீஸாருக்கு தெரிந்துவிட்டது என்றும், கட்டாயம் உங்களை பிடித்து விடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். இதனால் பிரச்னை ஏற்படுமோ என்கிற , நாகூர் ஹனிபாவும், சிறுமியும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்து உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்த முடிவைக் கைவிட்டு இருவருமே மருந்தை துப்பியுள்ளனர். ஆனால் சிறுமி சிறிதளவு எலி மருந்தை உட்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மறுநாளே சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து எலி மருந்து சாப்பிட்டதைக் கூறாமல், சிறுமியை நாகூர் அனிபா தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. பின்னர் நாகூர் ஹனிபாவின் தாயார் மதினா பேகம் சிறுமியை அவரது தயாரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்துவிட்டுச் சென்றுள்ளார். அதையடுத்து சிறுமியை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவரது தாயார் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலூர் சிறுமி உயிரிழப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாவட்ட எஸ்.பி., பாஸ்கரன், சிறுமி காணாமல் போன வழக்கை, போக்சோ வழக்காக மாற்றப்பட்டதாகவும், நாகூர் ஹனிபாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மதினா பேகம் நண்பர், உறவினர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்றும் கூறினர். மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பதை மருத்துவர்கள் உறுதி படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். சிறுமியின் படத்தையோ, பெயரையோ வெளியிடக்கூடாது என்றும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வதந்தி பரப்பக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *