நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் 291 இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சனிக் கிழமை நடைபெறுகிறது. இதற்காக 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டு உள்ளது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த மருத்துவ பொருட்கள் ஊட்டி பிரிக்ஸ் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வாக்குச் சாவடி வாரியாக மருத்துவப் பொருட்கள் பிரித்து வைக்கும் பணி நடந்தது. நகராட்சிகள், பேரூராட்சிகள் வாரியாக 406 வாக்குச்சாவடி களுக்கு மருத்துவ பொருட்கள் தனித்தனியாக அடுக்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் சுகாதாரத்துறை மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மருத்துவ பொருட்கள் அனுப்பும் பணி நடந்தது.
ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் இருந்து 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளுக்கு அந்தந்த வாகனங்கள் மூலம் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பணியாளர்கள் மருத்துவப் பொருட்கள் சரியாக உள்ளதா என்று உறுதி செய்து வாகனங்களில் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ஒரு வாக்குச்சாவடியில் தெர்மல் ஸ்கேனர், 500 மில்லி லிட்டர் கிருமி நாசினி 6 பாட்டில்கள், முகக்கவசம், முகமூடி, ரப்பர் கையுறை, வாக்காளர்களுக்கு கையுறை, குப்பை வாளி, முழு பாதுகாப்பு கவச உடை உள்பட 12 மருத்துவ பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. 15 உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மருத்துவ பொருட்கள் வாக்குச்சாவடி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது. தொடர்ந்து தேர்தலுக்கு முந்தைய நாள் மருத்துவ பொருட்கள், தேர்தல் பொருட்களை உள்ளாட்சி அமைப்புகள் மண்டல அலுவலரர்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது, என்றனர்!