• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கிய சவூதி ஏர்லைன்ஸ் விமானம்,

ByPrabhu Sekar

Feb 28, 2025

சவுதி அரேபியாவில் இருந்து 368 பயணிகளுடன், மலேசியா சென்று கொண்டிருந்த சவூதி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை அருகே நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு, ஏற்பட்ட திடீர் மூச்சுத் திணறல் காரணமாக, அந்த விமானம், சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு அவசரமாக தரையிறங்கியது.

மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த பயணி, விமானத்திலிருந்து பயணி கீழே இறக்கப்பட்டு, சென்னை நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அந்தப் பயணியின் குடும்பத்தினரும் அவசர கால மருத்துவ விசா மூலம், விமானத்தில் இருந்து கீழே இறங்கியுள்ளனர்.

விமானம் மற்ற 363 பயணிகளுடன், சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்டு செல்கிறது.

சவுதி அரேபியாவில் ஜட்டா நகரில் இருந்து, மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சவுதி ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று பிற்பகல் 368 பயணிகளுடன் ஜெட்டாவில் இருந்து புறப்பட்டு, கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டு இருந்தது.

இந்த விமானம் நேற்று இரவு 7 மணி அளவில், சென்னை வான் வெளியை கடந்து கொண்டு இருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த சுமார் 65 வயது உடைய ஒரு பெண்ணுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அடுத்து விமான பணிப்பெண்கள், விமானிக்கு அவசரமாக தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து விமானி விமானத்தை அருகில் உள்ள ஏதாவது ஒரு விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்தார்.

அப்போது சென்னை விமான நிலையம்தான் அருகே இருக்கிறது என்பதை விமானி அறிந்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் அவசரமாக தொடர்பு கொண்டார். அதோடு மருத்துவ சிகிச்சைக்காக விமானம், அவசரமாக சென்னையில் தரையிறங்க வேண்டும் என்றும் அனுமதி கேட்டார். மனிதாபிமான அடிப்படையில், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக அனுமதி கொடுத்தனர். இதை அடுத்து அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக நேற்று இரவு தரை இறங்கியது.

உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவக் குழுவினர் விமானத்துக்குள் ஏறி நோயாளிய பரிசோதித்த போது, அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை இருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அந்த மூச்சுத் திணறல் ஏற்பட்ட பெண் பயணி, அவரோடு வந்திருந்த மேலும் 4 பேர் ஆகிய 5 பேருக்கும், மருத்துவ சிகிச்சைக்கான அவசரகால விசாக்கள் வழங்கினர். இதை அடுத்து இவர்கள் ஐந்து பேரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர்.சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு அந்த இந்தோனேசியா நாட்டு பெண், சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த இவர்கள் ஐந்து பேரும், உம்ரா புனித பயணமாக, ஜெட்டாவுக்கு போய்விட்டு, மலேசியா வழியாக தங்களுடைய இந்தோனேசியா நாட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த போது தான் இந்த சம்பவம் நடந்ததாக தெரிய வந்துள்ளது.

இதை அடுத்து இந்த விமானம் 363 பயணிகளுடன் சென்னையில் இருந்து, கோலாலம்பூர் செல்வதற்கு தயாராகிக் கொண்டு இருக்கிறது.

நடு வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த ஒரு பயணிக்கு திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக, விமானம் சென்னையில் அவசரமாக தரையிறங்கி, அந்தப் பயணி சென்னை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.