ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் இரவு நேரங்களில் மணல் திருடப்படுவதாகவும் ,அதற்கு
போலீசார் உடந்தையாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கண்டமனூர் மற்றும் வீரபாண்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் வைகை ஆற்றில் நள்ளிரவு நேரத்தில் மணல் திருட்டு அதிகம் நடைபெற்று வருகிறது. தற்போது வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் நள்ளிரவு நேரத்தில் மாட்டு வண்டி, டிராக்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் அதிகளவு மணல் திருட்டு நடைபெறுவதாக இப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்காரணமாக ஆத்தங்கரைப்பட்டி பகுதியில் ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள விவசாய கிணறுகள் நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். வைகை ஆற்றில் தொடரும் மணல் திருட்டு குறித்து இப்பகுதி மக்கள் கண்டமனூர் மற்றும் வீரபாண்டி போலீஸ் நிலையங்களில் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மணல் திருடுபவர்களிடம் தட்டிக் கேட்டால் தங்களை மிரட்டுவதாகவும் இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
நள்ளிரவில் நடைபெறும் மணல் திருட்டுக்கு போலீசாரும் உடந்தையாக இருப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். நாளுக்கு- நாள் அதிகரித்து வரும் மணல் திருட்டை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.