தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் சங்கம் இன்று மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றும்படி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ட்டாட்டத்தில், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட நான்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். முன்னாள் பென்சன் டிரஸ்ட் உறுப்பினர் பிச்சை சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தினர் முன்வைத்த கோரிக்கைகள், 2015 முதல் வழங்கப்பட வேண்டிய 70 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 2003 பின் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும், 2020 முதல் தன் விருப்ப ஓய்வு மற்றும் மரணமடைந்த தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும், பிரதி மாதம் முதல் தேதியில் பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு பின் மாநில செயலாளர் தேவராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழக அரசு போக்குவரத்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றி தரவேண்டும், நிறைவேற்றாத பட்சத்தில் ஏற்கனவே போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தை மீண்டும் பணிமனைகள் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை நடத்துவோம் என்றார்.