அரிசியே இல்லாமல் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த தோசையை ஒரு முறை சுட்டு சாப்பிட்டு பாருங்கள்.
செய்முறை விளக்கம்
முதலில் 1 கப் அளவு பச்சை பயிரை முந்தைய நாள் இரவே ஊற வைத்து விடுங்கள். அப்போது தான் காலையில் தோசை செய்ய முடியும். பச்சை பயிரு 8 மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊற வேண்டும். ஊறிய பச்சைப் பயிரை நன்றாக கழுவி விட்டு, தண்ணீரை வடித்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள்.
ஊறிய இந்த பச்சை பயிருடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை – 2 கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 12 பல், பூண்டு – 6, கருவேப்பிலை – 1 கொத்து, பச்சை மிளகாய் – 2, இஞ்சி தோல் சீவியது – 2 இன்ச், சீரகம் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி இந்த தோசை மாவை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். 90% இந்த மாவு அரைபட்டால் போதும்.
அரைப்பட்ட இந்த மாவில் இறுதியாக தேவையான அளவு உப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவை போட்டு ஒரு ஓட்டு ஓட்டி அப்படியே ஒரு கிண்ணத்தில் கொள்ளுங்கள். தோசை மாவு பதத்திற்கு இதை கரைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். தோசை கல்லை அடுப்பில் வைத்து இந்த மாவில் தோசை வார்த்தால் அவ்வளவு அருமையாக இருக்கும். எப்போதும் போல அரிசி மாவு தோசை வார்ப்பது போலவே மெல்லிசாக ஊற்றி சிவக்க வைத்து எடுக்கலாம்.
ஆனால் இந்த தோசை வேகுவதற்கு சில நிமிடங்கள் எடுக்கும். கல்லில் இந்த தோசையை ஊற்றி சிவப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக வைத்து திருப்பி போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறம் வந்தவுடன் தேங்காய் சட்னி, காரச் சட்னி, சாம்பார் உடன் சுடச்சுட பரிமாறி பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும்.