உலகம் முழுவதும் குளிர்கால கொண்டாட்டங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் இன்னும் 4 நாட்களே இருப்பதால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்களும் அரங்கேறி வருகின்றன. கண்களை கவரும் வண்ண விளக்குகள், ஒளிரும் மாட மாளிகைகள் உயர்ந்து நிற்கும் மரங்கள் என ஒரு பக்கம் கிறிஸ்துமஸ் ஏற்பாடுகள் தீவிரம். கேளிக்கை நிகழ்ச்சிகள், ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என மற்றொரு பக்கம் குளிர்கால கொண்டாட்டங்களும் களைகட்டி வருகின்றன. லிதுவேனியா நாட்டிலுள்ள கேளிக்கை பூங்காவில் நடைபெற்று வரும் விளக்கு திருவிழா பார்வையாளர்களின் கண்களை கொள்ளைக் கொள்ளும் வகையில் உள்ளது.
வண்ண விளக்குகளால் உருவாக்கப்பட்ட காட்டூன் பொம்மைகள் மற்றும் விலங்கு உருவங்கள் அருகே நின்று குழந்தைகள் புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தன. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவும், குளிர்கால நிகழ்ச்சிகளுடன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கும் தயாராகி வருகிறது. பனி போர்த்தப்பட்டு வெண்ணிறத்தில் காட்சியளிக்கும் நகருக்கு மத்தியில் கட்டிடங்கள் வண்ண விளக்குகளும், அழகிய கிறிஸ்துமஸ் மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டு இருப்பது மாஸ்கோவை மாய உலகமாக மாற்றியுள்ளது.
வீடுகள் முன் சின்னஞ்சிறு கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கும் மக்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று வேடமணிந்து நகரை உற்சாகத்துடன் வலம் வருகின்றனர்.பல்வேறு இடங்களில் வித்தியாசமான போட்டிகள் நிகழ்த்துவதும், குழந்தைகள் ராட்டினம் சுற்றுவதும் என மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். துபாய் எக்ஸ்போவிலும் கிறிஸ்துமஸ் ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன.
வர்த்தக கண்காட்சியில் ஒளிரூட்டப்பட்ட 65 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. வால்ட் டிஸ்னி திரைப்படங்களில் வரும் அதிசய உலகம் போல எக்ஸ்போவின் அல்- வாஸ்ல்-பிளாசா அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாமேடையில் அரங்கேறிய சாண்டாகிளாஸ் நடனங்களை மக்கள் கண்டு களித்தனர்.