அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது உள்ளிட்ட பல காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம் அன்னிய செலாவணி சந்தையில் ரூ.79.96 ஆக முடிவடைந்தது. நேற்று சந்தையில் ரூபாய் மதிப்பு ரூ.80.27 என்ற அளவில் தொடங்கியது. அது மேலும் வீழ்ச்சி அடைந்து ரூ.80.95 அளவுக்கு சென்றது. இறுதியாக, ரூ.80.86 என்ற அளவில் முடிவடைந்தது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், இது 90 காசுகள் அதிகம். ஒரே நாளில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 காசுகள் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது முன்எப்போதும் இல்லாத வீழ்ச்சி ஆகும். அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று கடன்களுக்கான வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது. இது மூன்றாவது உயர்வாகும்
மேலும், உக்ரைனுக்கு எதிரான போரில் 3 லட்சம் வீரர்களை திரட்டப் போவதாக ரஷியா அறிவித்துள்ளது. இந்த காரணங்களால், அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத உச்சத்துக்கு சென்றது. அதனால், ரூபாய் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் நாணயங்கள் மதிப்பு கடுமையான சரிவை சந்தித்துள்ளது என்று அன்னிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.