கோவை சேர்ந்த 30 வயது இளைஞரிடம் ஆன்லைன் வேலைவாய்ப்பு என கூறி ரூ.6,80,684 மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை மாநகர குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர்.

கடந்த மார்ச் 26, 2025 அன்று ஜெம் நகரைச் சேர்ந்த இளைஞருக்கு டெலிகிராம் செயலி மூலம் @Anjalianju1123 என்ற ஐ.டியில் இருந்து ஒரு செய்தி வந்து உள்ளது. அதில், KRaheja Corp நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறி, சொத்து திட்டங்களை விளம்பரப்படுத்துவது, தொடர்பான ஆன்லைன் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளனர்.
தினமும் 20 விளம்பரங்களை பகிர்வதன் மூலம் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 900 ரூபாய் முதல் 2,500 ரூபாய் வரை சம்பளம் பெறலாம் என்று நம்பிய அந்த இளைஞர், https://www.krahejadeveloper-property.com என்ற போலியான இணைய தளத்தில் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டார். முதல் நாளில் 872 ரூபாய் சம்பளம் கிடைத்ததால், அவர் அந்த திட்டத்தை நம்பி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு கட்டணம் செலுத்தினார்.

பின்னர், தான் செலுத்திய பணத்தை திரும்பப் பெற முயன்ற போது தான், அது ஒரு மோசடி என்பது தெரிய வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞர் கோவை குற்றப் புலனாய்வு காவல் துறையில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த போலீசார், கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்து கிருஷ்ணா (20), டி.எஸ்.விஷ்ணு (28), பி.எஸ்.சுஜித் (26) ஆகிய மூன்று பேரை கைது செய்து உள்ளனர். இந்த மோசடி குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.