கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரச் சாலைகளில், ‘ஜென்-ஜி’ (Gen Z) இளைஞர்கள் என்ற போர்வையில் ஒரு சில சமூக விரோதக் கும்பல்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சாகசங்களில் ஈடுபட்டு வருவது, பொதுச் சாலைகளை தங்களின் சொந்தத் தகப்பன் வீட்டுச் சொத்தாக நினைக்கும் அராஜகத்தின் உச்சகட்டமாக மாறி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், பைக்கின் பக்கவாட்டு ஸ்டாண்டுகளைத் தரையோடு தரையாகத் தேய்த்து, தீப்பொறி பறக்கப் பறக்க சாலையில் சீறிப்பாய்ந்து கும்பலை கோவை மாவட்டக் காவல்துறை அதிரடியாக மடக்கிப் பிடித்தது. அந்தப் பசங்களுடனும், அவர்களுக்கு வண்டியை எடுத்துக் கொடுத்த பெற்றோர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது கிணத்துக்கடவு – கோவில்பாளையம் செல்லும் பிரதான சாலையில், கார் ஒன்றில் சென்ற இளைஞர் பட்டாளம், காரின் ஜன்னல் கண்ணாடிகளை முழுமையாக இறக்கி விட்டு வெளியே தொங்கியபடியும், ஒரு நபர் காரின் மேற்கூரை மீது எவ்விதப் பயமுமின்றி அமர்ந்து கொண்டும் அதிவேகமாக ‘டெத் ரேஸ்’ பாணியில் ஆபத்தான முறையில் காரைச் செலுத்தி உள்ளனர்.

மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அரங்கேறிய இந்த அநாகரிகச் செய்கையை, அவர்களுக்குப் பின்னால் காரில் வந்த பிற பயணிகள் தங்களின் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்பொழுது நெட்டிசன்கள் இடையே கடுமையான விவாதப் பொருளாக மாறி உள்ளது.




