• Sat. May 17th, 2025

மேட்டுப்பட்டி பிரிவில் சாலை மறியல் போராட்டம்..,

ByAnandakumar

Apr 28, 2025

கரூர் மாவட்டம், வெள்ளியணையை அடுத்த வடக்கு மேட்டுப் பட்டியில் உள்ள மல்லையன் கோவில் திருவிழா கொண்டாடுவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஒரு தரப்பை சார்ந்தவர்கள் அந்த கிராமத்தில் உள்ள எருது குட்டை சாமிக்கு மாலை கும்பிடுதல் திருவிழாவிற்காக சாமி சாட்டியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பு கிராம மக்கள் கரூர் – திண்டுக்கல் சாலையில் மேட்டுப்பட்டி பிரிவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளியணை காவல் நிலைய போலீசார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையோரத்தில் அமர வைத்து சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக வட்டாட்சியர் குமரேசன் தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அறிவுறுத்தியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்து சென்றனர். கிராம மக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.