விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது மாதாங் கோவில்பட்டி கிராமம். சிவகாசியிலிருந்து ஆலங்குளம் செல்லும் மெயின் ரோட்டில் மாதாங் கோவில்பட்டி பஸ் நிறுத்தம் அருகே மெயின் ரோட்டில் செபஸ்தியார்குருசடி தேவாலயம் கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது .

இந்த தேவாலயத்தில் வழிபடுவதற்காக வழக்கம் போல் காலையில் சென்றவர்கள் செபஸ்தியார் திருவுருவச் சிலை சேதப்படுத்தப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
கிராம மக்கள் தேவாலயத்திற்கு முன்பு ஏராளமானோர் திரண்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் .
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையில் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து சாத்தூர் டிஎஸ்பி குருசாமி உத்தரவின் பேரில் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர் அதில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததை பார்த்து சந்தேகத்தின் பேரில் இதே ஊரை சேர்ந்த மைக்டைசன், அபிஷேக் ,அஜய், அடைக்கலராஜ், ஆகிய நான்கு பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் மது போதையில் சிலையை உடைத்ததாக ஒப்புக்கொண்டனர்.
இதனால் உடனடியாக நான்கு பேரையும் ஆலங்குளம் போலீசார் கைது செய்தனர்
போலீசார் உடனடியாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ததால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.




