விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள வ.புதுப்பட்டி கிறிஸ்டியான் பேட்டையை சேர்ந்தவர் சுபாஷ் (29). இவர் வத்திராயிருப்பு- கிருஷ்ணன் கோயில் சாலையில் தனியார் பார் முன்பு நேற்று இரவு வெட்டப்பட்ட நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. பின்னர் தகவல் அறிந்த வத்திராயிருப்பு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது சுபாஷ் முகத்தில் பலத்த வெட்டுகளுடன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் வத்திராயிருப்பு பகுதியில் நேற்று இரவு சுபாஸ் என்ற இளைஞர் வெட்டிபடுகொலை செய்யப்பட்டதால் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சுபாஷின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மதுரை – கொல்லம் தேசிய சாலையில் 1 மணி நேரத்திற்கும் மேலாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.