தமிழ்நாடு பாரத் கியாஸ் எல்பிஜி சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினரின் திடீரென வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பாரத் பெட்ரோலியத்தின் எல்பிஜி பிளான்ட்டுகளில் சிலிண்டர் லோடு இறக்கு கூலியாக சிலிண்டர் விநியோகஸ்தர்கள் இதுவரை ரூ.600 வாங்கி வந்த நிலையில், தற்போது இதனை உயர்த்தி ரூ.950 ஆக வசூலிக்கின்றனர். அதே சமயம் விநியோகஸ்தர்களின் டெண்டரில், இறக்கு கூலி குறைவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை வெளியிட அதிகாரிகள் மறுக்கின்றனர்.
மேலும், ஒவ்வொரு மாதமும் சிலிண்டரின் மூடிகள் காணவில்லை என லாரி உரிமையாளர்களிடம் 3 ஆயிரம் ரூபாய் வரை பிடித்தம் செய்து வருகின்றனர். இந்த போக்கைக் கண்டித்து கோவை, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி, கும்மிடிப்பூண்டி, சின்னசேலம், சங்ககிரி ஆகிய 7 பிளாண்ட்களை இயக்காமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த 7 பிளாண்ட்களிலும் இயங்கி வந்த 500 லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் கடந்த 3 நாட்களில் மட்டுமே ரூ.100 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது