மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பேட்டை சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் பல நாட்களாக தேங்கிக் கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவி சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பகுதி பொதுமக்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.

சந்தன மாரியம்மன் கோவில் முன்பு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது பேரூராட்சி அதிகாரிகள் கழிவுநீரை வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் சந்தன மாரியம்மன் கோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் தாங்கலாக முன்வந்து தங்கள் வீடுகளில் முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறுகின்றனர். கழிவுநீர் கால்வாயை வெளியேற்ற பலமுறை பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நேரிலும் போன் மூலமும் புகாராகவும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

கழிவுநீர் தேங்கி கிடப்பதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு காய்ச்சல் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர் ஏற்கனவே சோழவந்தான் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்த நிலையில் தற்போது கழிவுநீரும் வெளியேறாமல் தேங்கி கிடப்பதால் மிகப்பெரிய அளவில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

பேரூராட்சி அலுவலர்கள் கூறுகையில் துப்புரவு பணிகளை செய்ய போதிய அளவில் உபகரணங்கள் இல்லாததால் குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்கி கிடப்பதாக கூறுகின்றனர். மாவட்ட நிர்வாகம் சோழவந்தான் பேரூராட்சிக்கு போதிய அளவில் உபகரணங்கள் வழங்கி குப்பைகள் மற்றும் கழிவு நீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





