கோவை, அவிநாசி சாலையில் நேற்று இரவு நபர் ஒருவர் கையில் செல்போனில் பேசியபடியும், அளவுக்கு அதிகமான மது போதையில் இருசக்கர வாகனத்தைத் தள்ளாடியபடியும் ஆபத்தான முறையில் இயக்கிச் சென்ற செல்போன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

கோவை மாநகரின் மிக முக்கிய சாலையான அவிநாசி சாலையில் நேற்று இரவு இச்சம்பவம் அரங்கேறி உள்ளது. சாலையில் சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகன ஓட்டி ஒருவர், ஒரு கையில் செல்போனைப் பேசியபடியும், மறு கையால் ஹெல்மெட் அணியாமல் பைக்கைக் கையாண்டும் சென்று உள்ளார். அளவுக்கு அதிகமாக மது அருந்தி இருந்ததால், அவர் தனது உடல் கட்டுப்பாட்டை இழந்து தள்ளாடியதோடு, அவர் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனமும் சாலையின் குறுக்கும் நெடுக்குமாகத் தள்ளாடியபடிச் சென்று உள்ளது.
அவருக்குப் பின்னால் காரில் வந்த பயணிகள், நள்ளிரவில் இந்த நபர் மிக ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குவதையும், கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அதனைத் தங்களது செல்போனில் வீடியோவாகப் படம்பிடித்தனர்.

அந்த வீடியோவில், மது போதையில் இருக்கும் அந்த நபர் சற்றும் பயமின்றி அதிவேகமாகவும், எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்தில் சிக்கும் வகையிலும் வாகனத்தைத் தள்ளாடவிட்டு ஓட்டிச் செல்லும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகி உள்ளன. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அவிநாசி சாலை இதுபோன்று மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.








