

என்.டி.ராமராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அன்னாரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.
ஆந்திராவில் பிரபல நடிகரும், முன்னாள் முதலமைச்சருமான என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. என்.டி. ராமராவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய அரசு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட முடிவு செய்தது. அதன்படி 44 மில்லி மீட்டர் சுற்றளவு கொண்ட நாணயம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் 50 சதவீதம் வெள்ளியும், 40 சதவீதம் செம்பு, 5 சதவீதம் துத்தநாகம், 5 சதவீதம் நிக்கல் கலந்து செய்யப்பட்டு உள்ளது.
நாணயத்தின் ஒரு புறத்தில் 3 சிங்கங்களுடன் அசோக சக்கரமும், மறுபுறத்தில் என்.டி.ஆர். ராமராவ் உருவம் பதித்து, அதன் கீழ் இந்தியில் நாதமுரி தாரக ராமராவ் சத்ஜெயந்தி 1923-2023 என அச்சிடப்பட்டுள்ளது. நாணய வெளியிட்டு விழா நாளை மறுநாள் நடக்கிறது. டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிடுகிறார்.
நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள என்.டி.ராமராவின் மகன்கள், மகள்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. விழாவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜூனியர் என்.டி.ஆர், கல்யாணராம் கலந்து கொள்கின்றனர்.
