சாலை விபத்தில் சிக்கிய ‘கச்சா பாதம்’ பாடகர் மார்பில் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..
கச்சா பாதம் பாடலைப் பாடி புகழ்பெற்ற பாடகர் பூபன் பாத்யாகர்.. நேற்று இரவு விபத்தில் சிக்கினார். அவர் மேற்கு வங்கத்தில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடகர் பூபன் செகண்ட் ஹேண்ட் கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருந்ததாகவும், அப்போது விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தின் போது அவரின் உடல் மற்றும் மார்பு உள்ளிட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேற்கு வங்க மாநிலம் குரல்ஜூரி கிராமத்தைச் சேர்ந்தவர் பூபன் பத்யாகர். இவருக்கு மனைவி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பூபன் நிலக்கடலை விற்று பிழைப்பு நடத்தி வந்த நிலையில், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ‘கச்சா பாதாம்’ பாடலை பாடினார்.
அவர் பாடிய வீடியோ இணையத்தில் வைரலாக, பூபன் மிகவும் பிரபலமானார். பின்னர், ஒரு இசை நிறுவனம் அவரிடம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கி அவருடன் ‘கச்சா பாதாம்’ பாடலை வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோ பட்டி தொட்டி முழுவதும் பரவி பூபன் மிகவும் பிரபலமானார். இதைத்தொடர்ந்து, தற்போது அவருக்கு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்தும் வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.