தேனி மாவட்டத்தில் ‘ஒரு நாள் சிறு விடுப்பு’ போராட்டத்தில் ஈடுபட்ட ரேஷன் கடை பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள் ‘சுருளி’ யில், தஞ்சமடைந்தனர். இதன் காரணமாக 500 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டதால், ரேஷன் பொருட்கள் பெறமுடியாமல் கார்டு தாரர்கள் அவதிப்பட்டனர்.
நிறுத்தி வைக்கப்பட்ட ஊதிய உயர்வு; ரேஷன் கடை பணியாளர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி உடனே வழங்கோரி நேற்று (பிப்.,8) மாநிலம் முழுவதும், தமிழ்நாடு ரேஷன் கடை பனையாளர்கள் சங்க உறுப்பினர்கள், ‘ஒரு நாள் சிறு விடுப்பு’ போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு பணிக்கு செல்லாமலும் புறக்கணித்தனர். தேனி மாவட்டத்தை பொறுத்தவரை, 350க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், சின்னமனுார், போடி, கம்பம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக, 500க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால், ரேஷன் கார்டு தாரர்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்வதில் பாதிப்பு ஏற்பட்டது. விடுப்பு எடுத்த கையோடு, ‘குஷி’ யடைந்த ஒட்டுமொத்த ரேஷன் கடை பணியாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஒன்று திரண்டு மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக கருதப்படும் ‘சுருளி’யில் தஞ்சமடைந்தனர். அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு, மாநில துணைத் தலைவர் பொன்மதி தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக அமைப்பு செயலாளர் கே.சேதுராமலிங்க பாண்டியன், மாவட்ட செயலாளர் சேதுராமன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், சிறப்பு தலைவர்கள் பன்னீர் செல்வம், அழகர்சாமி, சிவன் பிள்ளை ஆகியோர்… ‘கண்டன பொதுக்கூட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தனர்’ . மாவட்ட பொருளாளர் மகாலிங்கம் நன்றி கூறினார்.