அதானி விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை வரும் மார்ச் 13 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ரஜனி பாட்டீல் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரியும், அதானி விவகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி அவை நடவடிக்கைகளை முடக்கினர். இந்நிலையில், மாநிலங்களவை மார்ச் 13-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின் கடைசி நாளான இன்று (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு மாநிலங்களவைக் கூடியதும் வழக்கமான அலுவல் நடவடிக்கைகளுக்கான பணிகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவையில் பேச அனுமதிக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர்.எதிர்க்கட்சி தலைவர்களின் பல்வேறு நோட்டீஸ்களை ஏற்க அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் மறுத்ததும், அவையின் மைய பகுதிக்கு வந்து உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால் 1மாதகாலம் அவை ஒத்திவைக்கப்படும் என தெரிவித்தார். அதற்கு முன்பு, எதிர்கட்சி எம்.பி.க்களுக்கு தன்கர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.