• Fri. Apr 19th, 2024

விசுவாசத்தைப் பற்றி பேசுவதற்கு ராஜன்செல்லப்பா குடும்பத்திற்கு தகுதியில்லை.., எஸ்.எஸ்.கதிரவன் குற்றச்சாட்டு!

Byகாயத்ரி

Jun 26, 2022

தற்போதைய திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜன்செல்லப்பாவின் அரசியல் வாழ்க்கையை பற்றி தற்போதைய இளைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது மகன் ராஜ் சத்யன் மதுரை மண்டல தகவல்தொழில்நுட்ப செயலாளராக இருப்பதால் அவர் ஒரு மிகப் பெரிய ஆளுமை என்று இன்றைய தலைமுறையினர் எண்ணி வருகின்றனர். உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக இவரது குடும்பத்தைப் பற்றியும் மக்கள் மத்தியில் ராஜன் செல்லப்பாவும் அவரது மகன் ராஜ்சத்யனும் எவ்வளவு செல்வாக்காக இருந்தனர் என்பதைப் பற்றியும் தெரிவிப்பதாக விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் கூறியுள்ளார். அவர் பேசியுள்ளதாவது

ராஜ்சத்யனின்தந்தை ராஜன் செல்லப்பாவுக்கு புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இருவருமே தலைவர் கிடையாது. அவர் முன்னாள் அமைச்சர் திரு எஸ்.டி. சோமசுந்தரத்தை தலைவராக ஏற்றுக் கொண்டவர். அவரது சிபாரிசின் பேரில் 1979ஆம் ஆண்டு திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார் . பின்னர் 1983 களில் புரட்சித் தலைவருடன் கருத்து வேறுபட்டு எஸ்டி சோமசுந்தரம் தனிக்கட்சியாக நமது கழகம் கண்டபோது இந்த ராஜன்செல்லப்பா அதில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

அந்த தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் நமது கழக வேட்பாளராக தராசு சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் தான் இந்த ராஜன் செல்லப்பா.பின்னர் எஸ்டிஎஸ் கழகத்தில் இணைந்த போது 1989ஆம் ஆண்டு சேவல் சின்னத்தில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தவர் தான் இந்த ராஜன்செல்லப்பா. அதன்பிறகு எஸ்டிஎஸ் தயவால் 1993 ஆம் ஆண்டு ராஜன்செல்லப்பா ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். 1996இல் அம்மாவுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை உருவான போது எஸ்டிஎஸ்…. கண்ணப்பன்…. திருநாவுக்கரசு போன்றோர் அண்ணா திமுகவை உடைத்தபோது அதில் தன்னை இணைத்துக்கொண்டு 1999 வரை போட்டி அண்ணா திமுகவில் இருந்த உண்மைத் தொண்டர் தான் இந்த ராஜன்செல்லப்பா.

2001 ஆம் ஆண்டு கழகத்தில் இணைந்து திருமதி சசிகலா அவர்களது குடும்பத்துடன் ஒரு நல்ல தொடர்பை உருவாக்கிக் கொண்டு மறுபடியும் அரசியல் பிரவேசம் செய்தவர் தான் இந்த ராஜன்செல்லப்பா. 2006 ஆம் ஆண்டு மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் தோல்வியுறும் அளவு அதிகமான மக்கள் செல்வாக்குப் பெற்றவர் தான் இந்த ராஜன்செல்லப்பா. அதன் பின்னர் 2011ம் ஆண்டு திருமதி சசிகலா அவர்கள் போட்ட பிச்சையால் மதுரை மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்தவர்தான் இந்த ராஜன்செல்லப்பா. அதன் பின்னர் தனது மகனை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப செயலாளராக பதவி ஏற்க வைத்தார்.2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் படுதோல்வி அடைந்தார். ஆனால் தமிழகமே படுதோல்வி அடைந்த போது ஒற்றைச் சிங்கமாக தேனி தொகுதியில் வெற்றி பெற்றவர் எங்கள் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்குமார். ராஜன் செல்லப்பா மற்றும் ராஜ் சத்யன் குடும்பத்தவர்களுக்கு மக்கள் செல்வாக்கு கொஞ்சமும் இல்லை என்பதை இந்த பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அதேபோல அவர்கள் ஒரு காலத்திலும் புரட்சித் தலைவர் அவர்களுக்கோ, புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கோ விசுவாசமாக இருந்ததில்லை என்பதுதான் வரலாறு. இவர்களது வண்டவாளத்தை தமிழக மக்களுக்குத் தெரியப்படுத்தவே இந்த பதிவு என விருதுநகர் மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *