• Thu. Apr 25th, 2024

ராகுல்காந்தி பாதயாத்திரை இதுவரை
3,122 கி.மீ. தூரம் கடந்ததாக தகவல்

ராகுல்காந்தி பாதயாத்திரை இதுவரை 3,122 கி.மீ. தூரம் கடந்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு, நேற்று முன்தினம் மீண்டும் தொடங்கியது. டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்துக்குள் நுழைந்தது. பாக்பட் அருகே மாவிகளன் கிராமத்தில் யாத்திரை முடித்துக் கொள்ளப்பட்டது. அதையடுத்து, ராகுல்காந்தியும், பிரியங்காவும் டெல்லி திரும்பினார்கள். நேற்று அவர்கள் டெல்லியில் இருந்து மாவிகளனுக்கு வந்து சேர்ந்தனர். உத்தரபிரதேசத்தில் 2-வது நாள் யாத்திரை அங்கிருந்து தொடங்கியது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மாநில காங்கிரஸ் தலைவர் பிரிஜ்லால் காப்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராகுல்காந்தி வழக்கம்போல், வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து பங்கேற்றார். குபா கோவிலை அடைந்தவுடன், காலைநேர பயணம் முடிவடைந்தது. மாலையில் அங்கிருந்து பராட் நகர்வரை நடந்தது.ராகுல்காந்தி 3 தடவை எம்.பி.யாக இருந்த அமேதி தொகுதியை சேர்ந்த 1,400 காங்கிரஸ் தொண்டர்கள், வெள்ளை நிற டி-சர்ட் அணிந்து நடந்து சென்றனர். இந்த நடைபயணம், கன்னியாகுமரி முதல் டெல்லி செங்கோட்டை வரை 108 நாட்களில் 49 மாவட்டங்கள் வழியாக 3 ஆயிரத்து 122 கி.மீ. தூரம் கடந்திருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *